பகிர்தல்

உங்களுடன் பகிர சில பல உருப்படியான/ அல்லாத விஷயங்கள்

காலச்சுமை - ராஜ்கெளதன்
தமிழனி பதிப்பகம், 332 பக்கங்கள், ரூ.120.

நவீன தமிழ் இலக்கியத்தில் சில முக்கியமான விமர்சன நூல்களை எழுதியிருக்கும் ராஜ்கெளதமனின் புனைவு இது. தன் சுய சரிதத்தையே புனைவாக மாற்றி பதிந்திருக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. என்றாலும் புனைவுக்குரிய சுவாரசியம் குன்றாமல் அமைத்திருப்பது நன்று.
சிலுவைராஜூக்கு பாண்டிச்சேரி கல்லூரியில் உதவி பேராசிரியராக பணி நியமன உத்தரவு வருவதிலிருந்து இந்த நாவல் துவங்குகிறது.

பாண்டிச்சேரியின் சூழல், சிலுவைராஜின் திருமணம், உறவுகளுடன் அவனுக்கான மோதல்கள், பறையர் சாதி என்பதால் எதிர்கொள்ள நேரும் சமூக முரண்கள், கல்லூரி மாணவ அனுபவங்கள், வாடகை வீட்டுப் பிரச்சினைகள், இடமாற்றங்கள், குடிப்பழக்கம், இலக்கியம் மற்றும் நண்பர்கள், முனைவர் பட்டத்திற்காக அ.மாதவையா படைப்புகளின் மீதான ஆய்வு, வாழ்க்கையை எதிர்கொள்ள நேருகின்ற ஆயாசங்களில் நினைவு கூர்கிற தத்துவங்கள் என்று கலந்து கட்டி இந்த புனைவு அமைகிறது. பெரும்பாலும் பேச்சுத்தமிழிலேயும் அவ்வப்போது உரைநடையிலேயும் அமைந்திருக்கிறபடியால் வாசகனோடு நெருக்கமாக உறவாடுகிறது இந்த நாவல்.

"சிலுவைராஜ் சரித்திரம்" என்று முன்னமே வெளியாகியிருக்கிற புதினம், கல்லூரி வாழ்க்கையின் முன்பிருந்த பகுதிகளை சொல்கிறது என்று யூகிக்கிறேன். இந்த நாவலை படித்தவுடன் முதல் பகுதியை படிக்கிற ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

()

ஆல்·பா - டி.டி. ராமகிருஷ்ணன் (தமிழில் குறிஞ்சி வேலன்)
கிழக்கு பதிப்பகம், 136 பக்கங்கள், ரூ.50.

சாருநிவேதிதாவின் எழுத்துக்களை மலையாளத்தில் மொழி பெயர்த்து வழங்கிக் கொண்டிருக்கும் ராமகிருஷ்ணனின் மலையாள நாவல் குறிஞ்சிவேலனால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது.
நாகரிகத்தின் உச்சியை அடைந்து விட்டதாக கூறிக் கொள்ளும் மனித இனம், மீண்டும் தன் வாழ்க்கையிலிருந்து பூஜ்யத்திலிருந்து, அதாவது கற்கால மனிதனாக, காட்டுவாசியாக ஆரம்பித்தால் எப்படியிருக்கும்? இப்படியான ஒரு கேள்வி மனிதவியல் ஆய்வாளரான உபலேந்து சட்டர்ஜிக்கு ஏற்பட, மிகுந்த திட்டமிடலுடன் ஒரு குழுவை ஏற்படுத்தி மனித வாடையே இல்லாத ஒரு தீவிற்கு செல்கிறார். தான் வந்த படகு உள்பட அனைத்துப் பொருட்களையும் அழித்து விட்டு நிர்வாணமாக காட்டுக்குள் நுழைகிறது அந்தக் குழு. உபலேந்துவின் திட்டப்படி, சரியாக 25 வருடங்கள் கழித்து ஒரு ஆராய்ச்சி மாணவர் அந்தக் காட்டை அணுகி, அவர்களிடம் எவ்வாறான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்று ஆராய்வதற்கான முன்னேற்பாட்டையும் செய்து வைத்திருக்கிறார்.

1973 ஜனவரி ஒன்றில் ஆரம்பிக்கும் அத்தியாயம் சடாரென 25 வருடங்கள் தாவி நகர்கிறது. அவிநாஷ் என்பவர் இந்த திட்டத்தின் காரணகர்த்தாவான பானர்ஜியின் உத்தரவுப்படி அந்தத் தீவு மனிதர்களிடம் ஏற்பட்டிருக்கிற பரிணாம வளர்ச்சி குறித்து அறிவதற்காக புறப்படுகிறார்.

இவ்வாறு மிகச் சுவாரசியமான - ஒரு ஆங்கிலப்படத்திற்கு நிகரான - கதையுடன் துவங்குகிற படைப்பு, நாவலமைப்பு காரணமாக வாசிப்பதற்கு சோர்வை ஏற்படுத்துகிறது. பேராசிரியர் உபலேந்து சட்டர்ஜி உட்பட 13 பேர்கள் (அதில் 5 பெண்கள்) என்னவானார்கள் என்பதை நாவல் முன்னும் பின்னுமாக பல தர்க்கங்களுடனும் விவாதங்களுடன் நகர்கிறது. நகரத்திற்கு திரும்பி வருகிற மூன்று பேர் தங்கள் அனுபவங்களை விளக்கி விட்டு, பூமியின் நாராசங்களை ஏற்றுக் கொள்ள முடியாமல் திரும்பிச் செல்கின்றனர். ஒரு சுவாரசியமான ஆரம்பத்தை ஏற்படுத்தியிருக்கிற ஆசிரியர், இன்னும் கற்பனையை விரிவுபடுத்தி அந்த 13 பேருடனேயே நாவல் பயணிப்பதாக அமைத்திருந்தால் வாசிப்பனுபவத்திற்கு ஏற்புடையதாகயிருக்கும் என நம்புகிறேன்.

1 comments:

ஆல்ஃபா எனக்கு ஏனோ மனநிறைவை அளிக்கவில்லை. சுவாரசியமான அணிகள் மோதும் ஒரு நாள் பந்தயம், மழையினால் ரத்து ஆனது போன்ற நிறைவு.