பகிர்தல்

உங்களுடன் பகிர சில பல உருப்படியான/ அல்லாத விஷயங்கள்

அதிர்ச்சி மதிப்பீட்டிற்காகவோ, பரபரப்பை ஏற்படுத்தவோ அல்லது ரஜினி ரசிகர்களை சங்கடத்திலோ, கோபத்திலோ ஆழ்த்துவதற்காகவோ இந்த பதிவு எழுதப்படவில்லை. அது என் நோக்கமும் கிடையாது. ஆபாச வசைச் சொற்களைக் கூட எதிர்கொள்ள நேரிடும் என்று எதிர்பார்த்திருந்தும் இந்தப்பதிவு எழுதப்படுவதின் நியாயத்தை, திறந்த மனதுடன் வாசிக்கும் எவரும் பதிவின் இறுதியில் உணர்வார்கள் என்று நிச்சயமாகவே நம்புகிறேன்.

()

தமிழில் திரைப்படங்கள் தோன்றும் போது அது அப்படியே நாடகத்தின் கூறுகளை, தாக்கங்களை முழுவதுமாக உள்வாங்கி பிரதிபலித்தது. காட்சியமைப்புகள், ஆடை அணிகலன்கள், அரங்க அமைப்புகள், இசைப் பாடல்கள் என்று நாடகத்திற்கும் திரைப்படத்திற்கும் குறிப்பிடத்தக்க வித்தியாசம் ஏதுமில்லை. சுருங்கக்கூறின் நாடகங்களின் சுருள்வடிவமே திரைப்படம் என்பதாக இருந்தது. காளிதாஸ் (1931) ஹரிச்சந்திரா (1932) சீதா கல்யாணம் (1933) தொடங்கி புராணங்களின் உபகதைகளை கொண்டு தமிழ்ச் சினிமா பயணித்தது. பின்பு எம்.கே.தியாகராஜ பாகவதர், (ஹரிதாஸ் - 1944) பி.யூ.சின்னப்பா, கிட்டப்பா போன்ற இசையும் நடிப்புத்திறமையும் இணைந்த நாயக நடிகர்களின் துணை கொண்டு வளர்ந்தது. இடையே விடுதலைப் போராட்டத்தின் எதிரொலியாக காலனியாதிக்கத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் (நாம் இருவர் - 1947) எதிர்த்து திரைப்படங்கள் தோன்றின.

ஏ.பி.நாகராஜன் போன்றோர்களின் புராண மறுஉருவாக்க படங்களும் (திருவிளையாடல் - 1965) கண்களைப் பிழிய வைக்கும் பீம்சிங்கின் மிகை உணர்ச்சிப் படங்களும் (பாசமலர் 1964) வெளிவந்தன. புராணப்படங்கள் தேய்ந்து போய் சமூகக் கதைகள் (நல்லவன் வாழ்வான்; கெட்டவன் வீழ்வான் என்பதை அடிச்சரடாகக் கொண்டு) பெரும்பாலான படங்கள் வெளிவந்தன. இதிலிருந்து மாறுபட்டு ஸ்ரீதர் (தேன்நிலவு 1961) கே.பாலச்சந்தர் (சர்வர் சுந்தரம் 1964; நாணல் - 1965) போன்றவை வெளியாகின. தமிழ்த்திரையுலகின் முதல் கலகக்குரலாக (அன்றைய சூழ்நிலையில்) கே.பாலச்சந்தரை குறிப்பிடுவேன். அவள் ஒரு தொடர்கதை, அரங்கேற்றம், அபூர்வ ராகங்கள் போன்ற திரைப்படங்கள், மக்களை கனவுலகிலிருந்து மீட்டு யதார்தத்தின் வெளிச்சத்திற்கு அழைத்து வந்த ஆரம்பப் புள்ளிகளாக அமைந்து சர்ச்சைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தின.

()

1975-க்கும் 1980-க்கும் இடைப்பட்ட காலகட்டத்தை "தமிழ்த்திரையுலகின் பொற்காலம்" எனக்கூறலாம். பதினாறு வயதினிலே, சில நேரங்களில் சில மனிதர்கள் (1977), அவள் அப்படித்தான், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (1978) அழியாத கோலங்கள், உதிரிப்பூக்கள், நூல்வேலி, பசி, (1979), இவர்கள் வித்தியாசமானவர்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, நிழல்க்ள், மழலை பட்டாளம், மூடுபனி, (1980) என்று களம், பின்னணி, திரைக்கதையமைப்பு, இசை போன்ற பிரதான துறைகளில் வித்தியாசமான அமைப்பை கொண்டு வந்திருந்தன. எல்லா காலகட்டத்திலும் வணிக சினிமா, ரசனை சார்ந்த சினிமா என்பது தொடர்ந்து கொண்டிருந்தாலும், இந்தக் காலகட்டத்திலும் பெரும்பான்மையான ரசனை சார்ந்த சினிமா உருவாகின. இதன் மூலம் சர்வதேச திரைப்படங்களைப் பற்றின தேடலும், விவாதங்களும், விழிப்புணர்வும் சாத்தியமாக்கியது. நல்ல திரைப்படங்களை மக்கள் ஏற்கிறார்கள் என்பதால் வித்தியாசமான முயற்சிகளை கொடுக்கும் துணிவு இயக்குநர்களுக்கு ஏற்பட்டது.

திரைவிமர்சகர்கள் தமிழ்த்திரையுலகின் வரலாற்றை எழுதும் போது இந்த காலத்தை ஏக்கப்பெருமூச்சுடன் நினைவு கூர்கிறார்கள். இந்தப் படங்கள் பொதுமக்களின் பரவலான கவனத்தைப் பெற்றதோடு வணிக ரீதியான வெற்றியையும் பெற்றன. இதே நிலை தொடர்ந்திருந்தால், தமிழ்த்திரையுலகத்தின் முகமே மாறிப் போய் மேற்கு வங்காளம், கேரளம் போன்ற மாநிலங்கள் பெற்றிருந்த ரசனை வளர்ச்சியை நாமும் பெற்றிருக்கக்கூடும்.

ஆனால் 1982-ல் ஏவி.எம்.எம். நிறுவனத்திலிருந்து வெளிவந்த "சகலகலா வல்லவன்" என்கிற திரைப்படத்தின் மாபெரும் வெற்றி இந்த வளர்ச்சியை அடியோடு மாற்றியது. உலகப் போரின் போது ஜப்பானிய நகரங்களின் மீது போடப்பட்ட அணுகுண்டுகளின் பாதிப்போடு இதை ஒப்பிடலாம். குறிப்பிட்ட படத்தின் வணிகரீதியான மிகப் பெரிய வெற்றி மேற்சொன்ன சூழ்நிலையை குரூரமாக குலைத்துப் போட்டது. ஆபாசம், வன்முறை, நாயக புகழ்ச்சி, மிகை உணாச்சி, பாசாங்கு என்று எல்லாவிதமான செயற்கைத்தனங்களுடன்தான் பிற்காலத்திய படங்கள் வெளிவந்தன. இடையிடையில் மாற்று முயற்சிகள் வந்தாலும் அவை பெரும்பான்மையான கவனத்தை ஈர்க்கவில்லை. தமிழ் சினிமாவின் முக்கியமான மறுமலர்ச்சிப் படமான "நாயகனை" (1987) உருவாக்கிய மணிரத்னம், பிற்பாடு "தளபதி" (1991) போன்ற வணிகரீதியான சினிமாவை கொடுக்க நேர்ந்தது. தரமான திரைப்படங்களை பார்த்து உள்வாங்கி வெளிவந்த திரைப்படக் கல்லூரி மாணவர்களும் (ஊழை விழிகள் - இதே போன்ற படங்களையே அளிக்க முடிந்தது. விக்ரமன் போன்றோரது படங்கள் மோசமான முன்மாதிரிகளாகவே இருந்தன.

()

இப்போதைய காலகட்டத்திற்கு திரும்புவோம். தொடர்ந்து "ஸ்டீரியோ டைப்" படங்களை பார்த்து சலித்துப் போனதும், சர்வதேச சினிமா குறித்து அறிவுஜீவிகள் தவிர்த்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு எழுந்ததாலும், ஊடக வளர்ச்சி காரணமாக சினிமாவின் தொழில்நுட்பம் குறித்து பாமரனும் அறிய முடிந்ததாலும் மக்கள் மாற்று முயற்சிகளை மெலிதாக வரவேற்றனர். காதல் என்று ஆரம்பிக்கிற பெயரில் நிறைய கண்ராவிப் படங்கள் வந்திருந்தாலும், பாலாஜி சக்திவேலின் "காதல்" திரைப்படம் (2004) ஒரு பெரிய ஆசுவாசமாக அமைந்தது. நல்ல திரைப்படங்களை மக்கள் வரவேற்பார்கள் என்கிற நம்பிக்கை இளம் இயக்குநர்களுக்கு பிறந்தது. இதனின் சமீபத்திய தொடர்ச்சியாக அழகிய தீயே, வெயில், மொழி, பருத்தி வீரன் என்று குறைவான வணிக சமரசங்களோடு படங்கள் வெளிவந்து வணிக ரீதியாக வெற்றியையும் பெற முடிந்திருக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் முன் குறிப்பிட்ட பொற்கால சூழ்நிலையையும் தாண்டிச் செல்ல முடியும் என்கிற நம்பிக்கையை இந்தப் படங்கள் ஏற்படுத்தியிருக்கிறது. (வணிகரீதியான அம்சங்கள் குறைவாக இருந்தாலே, அது நல்ல படம் என்று நாம் பேச ஆரம்பித்திருப்பது துரதிர்ஷ்டவசமானதுதான் என்றாலும், நிஜமாகவே நல்ல படங்களை எடுப்பதற்கு இவைகளை ஆரம்ப முயற்சிகளாக கொண்டு வரவேற்கலாம்)

ஆனால் இந்த ஆக்கப்பூர்வமான சூழ்நிலையை சிவாஜி திரைப்பட வரவு குறித்த அதீத பரபரப்பு, முன்னர் குறிப்பிட்ட அதே மாதிரியான சீர்குலைவை ஏற்படுத்தி விடுமோ என்கிற அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சகலகலா வல்லவன் போன்றே சிவாஜியும் ஏவி.எம். நிறுவனத்திலிருந்து வெளிவருகிறது என்பதுதான் நகைமுரண். சினிமாப் பத்திரிகைகள் தொடங்கி ஜோதிடப் பத்திரிகைகள் வரை எதுவுமே "சிவாஜி"யைப் பற்றி எழுதாமலிருக்க முடியாது என்கிற அளவிற்கு இத்திரைப்படம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. (இதே போன்று முன்னர் பரபரப்பை ஏற்படுத்தின "பாபா"வின் கதியும் நினைவிற்கு வருகிறது). வேறெந்த படத்திற்கும் இல்லாத அளவிற்கு இந்த படத்தின் வணிக ரீதியான விற்பனையின் தொகை பரபரப்பைக் கூட்டியிருக்கிறது. ஆடியோ விற்பனையே 3 லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


எத்தனையோ வணிகரீதிப்படங்கள் தொடர்ந்து வந்துக் கொண்டிருக்கவில்லையா, சிவாஜி வருவதால்தான் ஆக்கப்பூர்வமான சூழ்நிலை மாறிவிடுமா? என்னய்யா அபத்தமாக இருக்கிறது? என்று உங்களில் சிலருக்கு தோன்றக்கூடும். ஏற்கெனவே குறிப்பிட்டது போல் நான் அஞ்சுவது இந்தப்படத்தின் பரபரப்பு குறித்தும், ஆர்ப்பாட்டம் குறித்தும்தான். ஒருவேளை இந்தப்படம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றால், மீண்டும் வணிகரீதியான படங்களுக்கு மவுசு கூடி, வணிகரீதி இயக்குநர்கள் பிசியாகி விடுவார்கள். மாற்று முயற்சிகளின் பிரகாசம் மங்கிப் போய், நாளடைவில் தேய்ந்து போய்விடவும் வாய்ப்புள்ளதாக நான் கருதுகிறேன். மீண்டும் இந்த சூழ்நிலை மலர எத்தனை வருடங்கள் காத்திருக்க வேண்டுமோ?


()

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். வருடத்திற்கு சுமார் 1000 படங்கள் தயாரிக்கும் ஒரு தேசத்திலிருந்து சர்வதேச தரத்திற்கு இணையான படங்களின் சதவீதம் மிக மிகக்குறைச்சலே. ஆஸ்கருக்காக ஏங்கிப் போய், அது கிடைக்காத விரக்தியில், அது உலகத்தரம் அல்ல, அமெரிக்கத்தரம் என்று பேசுவது "சீசீ இந்தப் பழம் புளிக்கும்" என்கிற கதையைத்தான் நினைக்க வைக்கிறது. ஆஸ்கர் விருது கிடைப்பது ஒரு புறம், அதன் நாமினேஷன் பட்டியிலில் இடம் பெறுவதற்கே நாம் மல்லாட வேண்டியிருக்கிறதே? cannes film festival-ல் திரையிடுவதற்கு கூட பெரும்பான்மையான திரைப்படங்கள் லாயக்கில்லாதவை. இந்த நிலை குறித்து நாம் கொஞ்சமாவது வெட்கப்பட வேண்டாமா? ஈரான் போன்ற கைக்குட்டை தேசங்கள் கூட சர்வதேச அளவில் குறிப்பிடத்தக்க கவனிப்பை பெறும் போது நம் நிலை என்ன?

"கல்தோன்றி மண்தோன்றா காலத்து முன்தோன்றிய மூத்தகுடி" என்று பழம்பெருமை பேசிக் கொண்டிருப்பதில் மாத்திரம் புண்ணியமில்லை. காலத்திற்கேற்ப நம் தரத்தையும் முன்னேற்றிக் கொள்ள வேண்டும். மக்களின் ரசனை மேம்பாடும், குறிப்பாக படைப்பாளிகளின் படைப்பும் மேம்பாடும் முக்கியமானவை. எனவேதான் சிவாஜி போன்ற அதிக பரப்பரப்பை ஏற்படுத்துகிற வணிக நோக்கமுடைய படங்களை தொடர்ந்து நாம் தோல்வியடைய வைப்பதன் மூலம், திரையுலகினரை சிந்திக்க வைத்து தரமான படங்கள் வெளிவர நாமும் நமது பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

40 comments:

ஏன் நல்ல படம் பாக்கலைன்ன இருக்க முடியாதோ?!

நல்ல அலசல்.

//ஆனால் இந்த ஆக்கப்பூர்வமான சூழ்நிலையை சிவாஜி திரைப்பட வரவு குறித்த அதீத பரபரப்பு, முன்னர் குறிப்பிட்ட அதே மாதிரியான சீர்குலைவை ஏற்படுத்தி விடுமோ என்கிற அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது//

இவற்றிற்கு காரணம் வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ள நினைக்கும் பத்திரிக்கைகளே அன்றி சிவாஜி எப்படி காரணம் ஆக முடியும்.

சிவாஜி படப்பிடிப்புக் குழுவினரின் ஓவ்வொரு அசைவையும் செய்தியாக்கும் பத்திரிக்கைகள், அவற்றைப் பிரசுரிக்காமல் இருக்கலாமே!

அப்படி சிவாஜி பற்றி செய்தி வெளியிடும் பத்திரிக்கைகளை சிவாஜியை விரும்பாதவர்கள் புறக்கணிக்கலாமே!

அப்படிப் புறக்கணிக்கும்போது பத்திரிக்கைகளும் திருந்தும் அல்லவா?

சிவாஜியை விடுத்து வேறு செய்திகள் தருவார்கள் அல்லவா?

படித்த கிறுக்குப் பிடித்த கூட்டமும் ரஜனியை தலையில் தூக்கிக் கொண்டாடும் வரை நல்ல படம் எப்படி வரும்?

புள்ளிராஜா

ஏற்கனவே சிறுபத்திரிக்கைக்காரர்களால் வைக்கப்படும் விமரிசனம். 'சிவாஜி' படத்தின் வெற்றி ஒன்றே தமிழ்சினிமாவை மீண்டும் தடம்புரட்டிவிடும் என்று நம்புவது தவறான வாதம் என்பது என் கருத்து.

அருமையான பதிவு.
பலருக்கும் உள்ளுக்குள்ளே குடைந்து கொண்டிருந்த விடயத்தை இங்கு அருமையாக நச்சென்று கூறியிருக்கிறீர்கள். எமது பாராட்டுக்கள். பேசாப்பொருளை பேசுபொருளாக்குவதே நமது கடமையும். பேசாப்பொருளை, பேசத்தயங்குகிற பொருளை, பேசப்பட்டே ஆகவேண்டிய பொருளை பேசுவதை எவராலாவது ஆரம்பிக்கப்படுகின்ற போதுதான் பலருக்கும் பேசுகின்ற துணிச்சலைத் தருகிறது. இது எனது சொந்த அனுபவத்திலிருந்தும் சொல்கிறேன். பலரது கவனத்தையும் இவ்வகையான கருத்துக்களின் மீது திரும்பச்செய்வோம். வாழ்த்துக்கள்.

அருமையான பதிவு.
பலருக்கும் உள்ளுக்குள்ளே குடைந்து கொண்டிருந்த விடயத்தை இங்கு அருமையாக நச்சென்று கூறியிருக்கிறீர்கள். எமது பாராட்டுக்கள். பேசாப்பொருளை பேசுபொருளாக்குவதே நமது கடமையும். பேசாப்பொருளை, பேசத்தயங்குகிற பொருளை, பேசப்பட்டே ஆகவேண்டிய பொருளை பேசுவதை எவராலாவது ஆரம்பிக்கப்படுகின்ற போதுதான் பலருக்கும் பேசுகின்ற துணிச்சலைத் தருகிறது. இது எனது சொந்த அனுபவத்திலிருந்தும் சொல்கிறேன். பலரது கவனத்தையும் இவ்வகையான கருத்துக்களின் மீது திரும்பச்செய்வோம். வாழ்த்துக்கள்.

இன்னும் சொல்லப் போனால் இது போன்ற பதிவுகளும் கூட அத்திரைப்படத்திற்கு விளம்பரத்தைத் தேடித் தருமே அன்றி ஒரு வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது!

சுரேஷ் கண்ணன்,

நான் ரஜினி ரசிகனாக ஆரம்ப நாட்களிலிருந்து இருப்பினும், தாங்கள் எந்த சூழலில், எவ்வித தாக்கத்தில், தங்கள் கருத்துகளை முன் வைத்துள்ளீர்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அருமையான நடையுடன் கூடிய, தகவல்கள் நிறைந்த, நாஸ்டால்ஜியாவை ஏற்படுத்திய ஒரு பதிவை அளித்தமைக்கு நன்றிகள் பல!

இது போல நிறைய எழுதுங்கள், கண்ணன் :)

என்றென்றும் அன்புடன்
பாலா
**************

200% உம்மோடு ஒத்துப் போகிறேன் சுரேஷ். காட்டுக்கூச்சலுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. இந்தப் படம் வராமல் போனால் வாழ்க்கையில் பெரும்பகுதி வீணாய் போய்விடுமோ என்று தமிழர்கள் பதைத்து போய் இருந்தது போல ஒரு உணர்வை திட்டமிட்டு விதைத்துப் பரப்புவதில் தமிழப் பதிவர்களுக்கும் பங்கு அதிகம்.

தமிழ் திரையுலகத்தை - உலகத்தரம் விடுங்கள் - அடுத்த கட்டத்திற்குக் கூட அரை சதவீதம் நகர்த்தத் தய்ங்காத ஒரு நடிகனிடம் நீங்கள் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? ஆரம்பக் காட்சியில் (நாய் விளக்குக் கம்பத்தில் ஒன்றுக்கடிப்பது போல) காலைத் தூக்கி முகத்தில் காட்டுவதைக்கூட பெருமையாகக் கருதும் ஒரு குமுகாயம் இருக்கும்வரை...

நீங்கள் எழுத வேண்டியதுதான். நாமும் வாசித்து பெருமூச்சு விட வேண்டியதுதான்

ஆசிப் மீரான்

சிறுபத்திரிகைகளில் ஏற்கனவே பலமுறை அலசப்பட்ட விடயம் என்று அலுத்துக்கொள்ள முடியாது.

மறுபடி மறுபடி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் விமர்சனங்களையும் நாம் பதிவு செய்தே ஆகவேண்டும்.

எதிர்ப்பில்லாமல் விமர்சனங்கள் இல்லாமல் நசிவுக்கலாசாரம் கோலோச்சக்கூடாதல்லவா?

வெயில் படம் அளவுக்கு, சேரனின் சில படங்கள் அளவுக்கு இன்றைய கோடம்பாக்கம் சினிமாப்போக்கை சிவாஜியால் மாற்றிவிட முடியாது.

அந்த வகையில் சிவாஜி பெரும் தோல்விப்படமாகவே அமையும்.

//'சிவாஜி' படத்தின் வெற்றி ஒன்றே தமிழ்சினிமாவை மீண்டும் தடம்புரட்டிவிடும் என்று நம்புவது தவறான வாதம்//

தங்கவேல், இது உண்மைதான். ஆனால் அதன் தோல்வி சிந்திக்கவைக்கும். பருத்திவீரந்மொழி வெற்றி, சிவாஜி தோல்வி என்பது தம்மிழ் சினிமாவில் உள்ள செண்டிமெண்ட் வெறியர்களை வேறுபக்கம் திரும்பச்செய்யும். ஏவியெம் நிறுவனத்தின் கால்குலேட்டட் ரிஸ்குகளுக்கும் ஒரு ஆப்பு அவசியம் என்று நானும் கருதுவதால்

சுரேஷ் கண்ணனோடு கொள்கைக் கூட்டணி அமைக்கிறேன்:-)

சுரேஷ் கண்ணன்,
சமீபத்தில் சிவாஜி பற்றிய ஒரு பதிவில் ,உங்கள் இந்த பதிவின் உட்கருத்தை நானும் சொல்லியிருந்தேன் .தமிழ் சினிமா 4 அடி முன்னால் எடுத்து வைக்கும் போது 5 அடி அதை பின்னால் இழுப்பது ஏ.வி.எம் பல காலமாக செய்து வருகிறது .சகலகலா வல்லவன் ,முரட்டுக்காளை ,ஜெமினி ..இப்போது சிவாஜி அந்த பட்டியலில் வந்து விடுமோ?

சுரேஷ் கண்ணன், நல்லதொரு பதிவு. கொஞ்சம் நல்ல படங்களில் நடித்துக்கொண்டிருந்த விக்ரமையும், 'ஜெமினி' மூலம் மசாலா ஹீரோ ஆக்கிய பெருமை ஏவிஎம்மிற்கே உண்டு.

விவரம் அறிந்திருப்பதுபோல் ஜல்லியடிக்கும் முயற்சிதான் இந்தக் கட்டுரை.

//பீம்சிங்கின் மிகை உணர்ச்சிப் படங்களும் (பாசமலர் 1964) வெளிவந்தன.//

//இதிலிருந்து மாறுபட்டு ஸ்ரீதர் (தேன்நிலவு 1961)//

இது என்ன முரண். பாசமலர் மிகைஉணர்ச்சி, தேன்நிலவு மாறுபட்டதா? இரண்டையும் பார்த்திருக்கிறீர்களா? காட்சிக்குக் காட்சி ஒப்புமை செய்வோமா?

உன்னையறிந்தால் என குதிரையில் ஓடி பெண்ணைத் துரத்தியதற்கும், பாட்டுப்பாடவா என குதிரையில் பெண்ணைத் துரத்தியதற்கும் பாடல் வரிகளைத் தவிர வேறெந்த வித்தியாசமும் இல்லாமல் கதாநாயகி முகத்தில் மிகைஉணர்ச்சி கொந்தளித்த சாதாரணப் படம்தான் தேன்நிலவு.

எம்.ஜி.ஆரின் காதல் பாட்டுடன் ஒப்புமை நோக்கத் தகுதியான ஒரு படத்தை வித்தியாசமான படம் எனச் சொல்லும் உங்கள் அளவுகோல் அற்புதமான ஜல்லி.

//1975-க்கும் 1980-க்கும் இடைப்பட்ட காலகட்டத்தை "தமிழ்த்திரையுலகின் பொற்காலம்" எனக்கூறலாம்.

நெஞ்சத்தை கிள்ளாதே, நிழல்க்ள், மழலை பட்டாளம், மூடுபனி, (1980)//

இந்த லிஸ்ட்டில் மழலைப்பட்டாளம் எப்படிச் சேர்ந்தது? படம் பார்த்திருக்கிறீர்களா? இதனைச் சேர்த்தால் அதற்கு முன் வெளிவந்த எங்கமாமாவை ஏன் சேர்க்காமல் போனீர்?

மலையாளப் படங்களுக்கு இணையாக நனையவிட்டு எடுத்த படம் நூல்வேலி. திருமண உறவைத் தாண்டிய ஒழுக்கக்கேடுகளைப் படம் பிடித்தால் அது உங்களுக்கு வித்தியாசமாகப் படுகின்றதா? உங்கள் லிஸ்ட்டில் நூல்வேலியைச் சேர்க்கிறீர்கள்.

//வணிக நோக்கமுடைய படங்களை தொடர்ந்து நாம் தோல்வியடைய வைப்பதன் மூலம், திரையுலகினரை சிந்திக்க வைத்து//

ஓ...படம் தோல்வியடைந்தால் நல்ல சூழல் கிடைக்குமோ. அதனால்தான் கலைப்படம் என்று சொல்லும் எல்லாமும் டப்பாவுக்குள் ஓடுகின்றதோ.

நீங்கள் சொல்வது சரியான தீர்வுதானா? பாபாவின் தோல்விக்குப் பின் வந்த சந்திரமுகி கலைப்படமாக மக்களின் நுண்ரசனைக்கு தீனிபோட்டுதான் அமைந்திருந்ததோ?

நல்ல தீர்வு சார்.

Sivaji movie is not vigorously promoted by AVM or Rajni or Shankar. Media is creating hype, because they want to sell their products. Why did you wrote this blog, because you want to create sympathy by using Sivaji ride. It is not mistake of AVM or Rajni. It is mistake of media.

//(வணிகரீதியான அம்சங்கள் குறைவாக இருந்தாலே, அது நல்ல படம் என்று நாம் பேச ஆரம்பித்திருப்பது துரதிர்ஷ்டவசமானதுதான் என்றாலும், நிஜமாகவே நல்ல படங்களை எடுப்பதற்கு இவைகளை ஆரம்ப முயற்சிகளாக கொண்டு வரவேற்கலாம்)//

:))

அருமையான பதிவு

bangladesh(sivaji) bermuda(rasigan) kooda ippo thOkkaadhu...
aanaa india(nalla padangal) indha madhiri endha saadhagamaana pirar tholviyum illamaley thannigara vetriyoda WC(oscar) vaangum...

இந்தப் பதிவும் ஒரு "மறைமுகமாக, சிவாஜி போர்வையில் குளிர் காயும்" முயற்சிதானே!

பருத்திவீரன் இன்னும் மாபெரும் வெற்றி பெறவேண்டுமென ஒரு பதிவு போட்டிருக்கலாமே!

நீங்களே இதற்கு விதிவிலக்காக இல்லாதபோது, மற்றவரைக் குறை கூறி என்ன பயன்?

வெற்றி பெறுவதும், டப்பாவுக்குள் போவதும் மக்கள் கையில் இருக்கிறது.

அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

உங்கள் திறமையை வேறு தகவல்களில் காட்டலாமே!

I do not understand what you mean by good or bad movie. You mentioned "Kaadhal" as good movie. One boy and girl eloped because of the infatuation. The boy becomes mentally disturbed. What do you take from the movie? Do you take any extraa feelings? Whether it is Sakala kala vallavan or Kaadhal or Deiva magan, it is just entertainment. Whether I want to watch the movie or not is just my choice. Baba was not just people's choice. But Chandramukhi was. Do not expect anyone to fail. Perhaps you may want to see only particular moview. I do not have any restriction on my movie watch. Infact I want to watch all kinds of movies including Deiva magan, Moondram pirai,Anbe sivam and Baasha. I believe that there is a section like me. There may be another section which does not want to watch movies like Kaadhal so and so. If the movie is not people's choice, it will fail. But your choice is not always people's choice. BTW, I wondered how you added Nayagan in you list? It is just tamil xerox of ... I never liked or disliked the movie. But Anbe Sivam was excellent

Forgot to add my name in anonymous comments.

Mohan

ஆசிப் அண்ணாச்சி.

//தமிழ் திரையுலகத்தை - உலகத்தரம் விடுங்கள் - அடுத்த கட்டத்திற்குக் கூட அரை சதவீதம் நகர்த்தத் தய்ங்காத ஒரு நடிகனிடம் நீங்கள் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? //

நகர்த்தத் *தயங்கும்*னு சொல்ல வந்தீயளோ?

சுரேஷ். திரைப்படத்துறை 'கலைச் சேவைக்கு' என்று கமல்ஹாஸன்கூட சொன்னதில்லை. ஊதியமில்லாமல் யாரும் வேலை செய்வதில்லை.

வியாபார ரீதியாகவே எல்லாம் நிகழும் அந்தத் துறையில் சிவாஜி அதீத பரபரப்பு எழுப்புகிறது என்று உங்களுக்குத் தோன்றலாம். இப்படி அதீதப் பரபரப்பு எழாது எந்த ரஜினி படம் வந்திருக்கிறது என்று சொல்லுங்கள்? விலைவாசியை திடீரென்று இருபது வருடங்களுக்கு முன்பு இருந்த சூழ்நிலையோடு என்றாவது ஒரு அரைக்கண் தூக்கத்தில் நாம் ஒப்பிட்டு அதிர்ச்சியடைந்து தூக்கிவாரிப்போடுவது போல சிவாஜியி்ல் புரளும் கோடிகளின் பிரம்மாண்டம் உங்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது என்று நினைக்கிறேன். நீங்கள் அரைத்தூக்கத்தில் இருந்தீர்கள் என்று சொல்லவில்லை :-)

மாற்றுப்படங்களின் முயற்சி தொடர்ந்துகொண்டே இருக்கும். ஆனால் சினிமாவைக் கலையாகப் பார்க்காமல் பொழுதுபோக்குச் சாதனமாகப் பார்க்கும் கூட்டமே பிரதானம் எனும்போது இம்மாதிரி வணிகரீதியாகப் படங்கள் வருவது குறைய வாய்ப்பே இல்லை. ஹாலிவுட்டில் மட்டும் என்ன வாழ்கிறது? அவர்களும் மிகப்பெரிய வணிகரீதியான படங்களுக்கு ஏற்படுத்தும் Hype-ஐ நாமெல்லாம் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்.

நமக்குக் கமலும் வேண்டும். ரஜினியும் வேண்டும். ஜாக்கி சானும் வேண்டும். அல் பாஸினோவும் வேண்டும்.

Cool Down. :-)

//சினிமாப் பத்திரிகைகள் தொடங்கி ஜோதிடப் பத்திரிகைகள் வரை எதுவுமே "சிவாஜி"யைப் பற்றி எழுதாமலிருக்க முடியாது//

முன்பெல்லாம் மூன்று வேளை சோற்றுக்கான காசைத்தான் கொடுத்து சினிமாவைப் பார்ப்பார்கள். ரஜினி புன்னியத்தில் மூன்று நாள் சோற்றுக் காசைக் கொடுத்தால் படம் பார்க்க முடியும் என்ற நிலைவேறாம் ( என்னமோ பட்ஜெட் 50 கோடியாம், அப்போ 4 வாரங்களுக்கு டிக்கெட் என்ன விலை இருக்குமோ ?)

ஏழைகள் சார்பாக திரையில் வசனம் பேசும் ரஜினிக்கு இதெல்லாம் தெரியாமல் போனதில் அதிசயம் ஒன்றுமில்லை. எனென்றால் அவர் 100% வியாபாரி !
:)))))

படம் பார்ப்பதற்கு முன்பே 'குப்பை' என்னும் தீர்மானத்துடன் அணுகுவது போல் தோன்றுகிறது ;)

திண்ணை ஜெயமோகனில் இருந்து 'மருமகள் சீதனமாகக் கொண்டுவந்த செம்புப்பானையை மாமியார் கையில் வாங்கிப் பார்த்தார்களாம். தலைகீழாக. அதன் மேல்பகுதியை தடவிப்பார்த்து 'இதென்ன , ஒரு பானை என்றால் அதற்கு வாய் இருக்கவேண்டாமா? எப்படி த்ண்ணிஈரை உள்ளே விடுவது, இப்படி மூடியிருக்கிறதே என்றாளாம்' அதன் பின் அடிப்பகுதியை தடவிப்பார்த்து ' சரி அப்படி விட்டோமென்றால்கூட இவ்வளவு பெரிய ஓட்டை அடியில் இருக்கும்போது எப்படி தண்ணீர் உள்ளே நிற்கும்?'' என்றாளாம்'

---சகலகலா வல்லவன் போன்றே சிவாஜியும் ஏவி.எம். நிறுவனத்திலிருந்து வெளிவருகிறது என்பதுதான் நகைமுரண். ---

'நகைமுரண்' என்பது இங்கே பொருத்தமான முறையில் கையாளப்பட்டிருக்கிறதா? 'காதல்' படத்தைத் தயாரித்த ஷங்கரிடமிருந்து சிவாஜி வருது என்பது நகைமுரண். சகலகலா வல்லவனும் வணிகம், சிவாஜியும் வணிகம் (ஆக இருக்கும்) என்று சொல்வது ஒற்றுமை. முரண் இல்லையே?!

தொடர்புள்ள என்னுடைய இன்னொரு பதி(ல்)வு: Snap Judgement: Sivaji - Movie: Survey Thoughts

We seem to have very few choices
between 'super stars' and politicians.Read the the interview
with thirumavalavan in recent Ananda Vikatan.The media hype is
nonsense.But they also realised
that the very hype resulted in
making Bhabha a disaster.But
whoever wins or loses media
wins :).

முதலில் நல்லதொரு அலசலான பதிவைத் தந்ததற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

ஆனால் நீங்கள் கூறியதில் சிலவற்றில் இருந்து நான் மாறு படுகிறேன். முக்கியமானது, எல்லாத் திரைப் படங்களும் கலை அம்சம் நிரம்பிய படங்களாகவே இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது .

திரைப் பட ஊடகம் என்பது, படித்தவர்களுக்கு மட்டுமில்லை. பொருளாதாரம்,சமூகம் மற்றும் படிப்பறிவில் பலதரப் பட்ட நிலையிலிருப்பவர்களிற்கும் தான். மெதுவாகத்தான் அவர்களது ரசனையை மாற்ற் முடியும் என்பது என் எண்ணம்.

பார்க்கலாம். போக்கிரியை விடவா இப்படம் மோசமாக இருந்து விட முடியும்.

Look at the link below and read through the Discussion forum... It's a shame north Indians and South Indians are fighting so badly with so much of hatred.

http://specials.rediff.com/movies/2007/apr/09slide1.htm

சுரேஷ், மறுமொழி பெருசாப் போய்ட்டதாலே, என் பதிவிலே தனி இடுகையாப் போட்டுட்டேன்.

http://icarusprakash.wordpress.com/2007/04/10/sivaji-sureshkannan/

சுரேஷ்,
கொஞ்ச நளைக்குமுன் நான் இந்தியா கிரிக்கட்டில் தோற்கவேண்டும் என்று விரும்பினேன் அது போல்தான் உங்களின் இந்த சிவாஜி தோல்வி விருப்பம் என்பது புரிகிறது. :-))

எல்லாம் நன்மைக்கே

உங்களின் எதிர்பார்ப்பு எல்லாம் சரி ஆனால் உலக நாயகன் போல் உங்களுக்கும் ஆஸ்கர் பற்றி இன்னும் சரியாக விளங்கவில்லை என்று நினைக்கிறேன்:-))


//ஆஸ்கருக்காக ஏங்கிப் போய், அது கிடைக்காத விரக்தியில், அது உலகத்தரம் அல்ல, அமெரிக்கத்தரம் என்று பேசுவது "சீசீ இந்தப் பழம் புளிக்கும்" என்கிற கதையைத்தான் நினைக்க வைக்கிறது. ஆஸ்கர் விருது கிடைப்பது ஒரு புறம், அதன் நாமினேஷன் பட்டியிலில் இடம் பெறுவதற்கே நாம் மல்லாட வேண்டியிருக்கிறதே?//

.
1.ஆஸ்கர் அமெரிக்க படங்களுக்கான ஒரு அமைப்பு. நம்மூர் பிலிம்பேர் போல.
2.அங்கு அமெரிக்கப் படங்கள் மட்டுமே ஆட்டையில் சேர்த்துக் கொள்ளப்படும்.
3.அதில் உள்ள ஒரு பிரிவு(கேட்டகிரி ) வெளிநாட்டுப் படங்கள். அமெரிக்காதவிர எல்லா நாட்டுப் படங்களும் இதில் கலந்து கொள்ளலாம்.
4.இதற்கு நாம் போட்டி போடுவதும் அதற்காக வாழ்வதும் முட்டாள்தனம்.இது ஒன்றும் அனைத்து நாடுகளுக்கும் பங்கேற்க சம வாய்ப்பு வழங்கும் சினிமா ஒலிம்பிக்கிடையாது.(அப்படி ஒன்று இருந்தாலும் நாம் ஒன்றும் கிழித்துவிடப் போவது இல்லை என்பது வேறு விசயம் :-) )

மரத்தடியிலும் யாரர்காப்பிக் கிளப்பிலும் பார்ப்பனரை அண்டி நக்கிப் பிழைக்கும் இந்த நாய்கள் கமலகாசனைத் தூற்றுமா? தூற்ரவே தூற்றாது. ஏன் என்றால் கமலஹாசன் ஒரு பாப்பான். அவன் படம் ஓடவேண்டும். ஆனால் ரஜினி படம் ஓடக்கூடாது!

நல்லா இருக்குடா உங்க வெங்காய விளக்கம்!

ரஜினி என்ற தனிமனிதனின் புகழ் மீதான காழ்புணர்ச்சியை, அறிவு ஜீவித்தனமான வாதங்களை முன் வைத்து வெளிப்படுத்தியுள்ளீர்கள்.

இவ்வாதங்களில் துளிக்கூட நேர்மை கிடையாது.யூகங்களிம் அடிப்படையில், சினிமா வரலாற்றையும் முழுமையாக பிரதிபலிக்காமல் எழுதப்பட்டிருக்கும் இக்கட்டுரை கண்டிப்பாக பரபரப்பு ஏற்படுத்த எழுதப்பட்டுள்ளதே தவிர, வேறு எதற்காகவும் இல்லை

நண்பருக்கு வணக்கம் .
முதலில் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் சிவாஜி படம் பற்றி தயவுசெய்து செய்தி வெளியிடுங்கள் என எந்த ஊடகத்திடமாவது ரஜினியோ சங்கரோ அல்லது ஏ.வி.எம். நிறுவனமோ கெஞ்சியதில்லை.

திரைப்படத்துறை பற்றிய அதுவும் குறிப்பாக ரஜினியைப் பற்றிய செய்தியை வெளியிட்டால் பத்திரிக்கை விற்பனை நன்றாக நடக்கும் என இதையெல்லாம் செய்யும் பத்திரிக்கைகள் மீது தான் நீங்கள் குற்றம் சொல்ல வேண்டும்.

//
கோவி.கண்ணன் said...

முன்பெல்லாம் மூன்று வேளை சோற்றுக்கான காசைத்தான் கொடுத்து சினிமாவைப் பார்ப்பார்கள். ரஜினி புன்னியத்தில் மூன்று நாள் சோற்றுக் காசைக் கொடுத்தால் படம் பார்க்க முடியும் என்ற நிலைவேறாம் ( என்னமோ பட்ஜெட் 50 கோடியாம், அப்போ 4 வாரங்களுக்கு டிக்கெட் என்ன விலை இருக்குமோ ?)

ஏழைகள் சார்பாக திரையில் வசனம் பேசும் ரஜினிக்கு இதெல்லாம் தெரியாமல் போனதில் அதிசயம் ஒன்றுமில்லை. எனென்றால் அவர் 100% வியாபாரி !
//

நண்பர் கோவி.கண்ணன் உங்களை யாரு முதல் 4 வாரத்துக்குள்ளாகவே படம் பாக்க சொன்னது ? 3 மாசம் கழிச்சு அந்த படம் பாத்தா என்ன ? நண்பரே ரஜினி மட்டுமல்ல இன்றைய சூழலில் எல்லோருமே வியாபாரிகள் தான்.

நண்பர் சுரேஷ் கண்ணன் நீங்கள் என்னுடைய பின்னூட்டத்தை அனுமதிபீர்கள் என்ற நம்பிக்கையில் இறுதியாக ஒரு கேள்வி....

இலட்ச இலட்சமாக அல்லது கோடி கோடியாக பணம் செலவழித்து நல்லதொரு கலைப் படம் ஒன்றை எடுத்து வெளியிட தாங்கள் தயாரா (வசூல் ரீதியாக பெரும் பின்னடைவை சந்தித்திராத கலைப் படங்கள் மிக மிக கொஞ்சம் என்பது தாங்கள் அறியாததல்ல.) ?

மிக நல்ல படம் எடுத்து நட்ட மடைந்த தயாரிப்பாளருக்கு இதுவரை நாம் ஏதாவது செய்த துண்டா?

என்னக்கும் நல்ல படங்கள் மட்டும் வர வேண்டும் என ஆசைதான் ஆனால் அதற்கு நான் குறை கூற வேண்டியது மக்களைத் தானே தவிர மற்றவரை அல்ல.

புண்படுத்தியிருப்பின் மன்னிக்கவும்.

நன்றி மற்றும் நட்புடன்
காளீஸ்வரன்.

இந்த இடுகையின் நோக்கமே பிற்போக்கான சிந்தனை மாதிரி தெரிகிறது.

கமர்ஷியல் படங்களோ கலை படங்களோ அவற்றை சந்தைபடுத்துதல் மிக முக்கியம்.

இங்கே இருக்கும் சந்தையில் அதிகம் விலை போகும் சரக்கு ரஜினியின் screen presence.

மாறுபட்ட சிந்தனை உடையவர்கள் மாறுபட்ட சந்தையை உருவாக்குங்கள்.

நாம் வெற்றி பெறவேண்டும் என்று நினைக்காமல் அடுத்தவர் தோற்க வேண்டும் என்று நினைப்பது என்ன வகை சிந்தனை என்று தெரியவில்லை.

பருத்தி வீரன் போன்ற படங்களும் கமர்ஷியல் பார்முலாவிலிருந்த முற்றிலும் விதி விலக்கல்ல என்பது எனது எண்ணம்.

நல்ல பதிவு ..இந்தப்படம் தோற்பது படைப்பாளிகளுக்கும் , ரசிகர்களுக்கும் அவசியமானது . இந்தப்பதிவில் ஜோ இதையே சொல்லியுள்ளார் .அக்கருத்தை மிகவும் விளக்கி நீங்கள் எழுதியுள்ளீர்கள் .. ரஜினி , தமிழ் திரையுலகில் தனக்குக்கிடைத்த செல்வாக்கினை கொண்டு , நல்ல தரமான பட வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கலாம் .. நாய்க்கு டாய்லெட் கட்டிகொடுத்தாலும், விளக்குக்கம்பை பார்த்தால், கால் தூக்கத்தான் செய்யும் . (சந்திரமுகி அறிமுக சீனை சொல்லவில்லை) எனபது சரிதான் போலிருக்கிறது

இது போன்ற பதிவுகளுக்கான என் கருத்தை பதிவாக போட்டு இருக்கிறேன்.

உரல் : http://manathinoosai.blogspot.com/2007/04/blog-post.html

நல்லதோர் பதிவு....வித்தியாசமான சிந்தனை...இந்த படத்தின் விடயங்கள் அனைத்தும் மிக மிக ரகசியமாக வைக்கப்படாமல் இருந்திருந்தால் இவ்வளவு எதிர்பார்ப்புகள், பரபரப்புகள் இல்லாதிருக்கும்..

//உலக நாயகன் போல் உங்களுக்கும் ஆஸ்கர் பற்றி இன்னும் சரியாக விளங்கவில்லை என்று நினைக்கிறேன்:-))//

வெகு காலங்களுக்கு முன்னமேயே கமல் தனக்கு ஆஸ்கர் மேல் அப்படி ஒன்றும் பெரும் அபிமானம் இல்லை என்று சொல்லியிருக்கிறார். அவருடைய பல படங்களை இந்திய தேர்வு கமிட்டி தேர்வு செய்து அனுப்பியிருந்தாலும், அவர் எப்பொழுதும் ஆஸ்கருக்காக lobby செய்தது இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆமிர்கான் லகான் படத்திற்காக செய்தது போல்.

கடந்த வருடம் cannes விழாவில் கலந்து கொண்டார்.

அவருக்கு தேவை விருதுகள் இல்லை. அதே சமயத்தில் சிறந்த கலைப் படங்கள் மட்டும்தான் கொடுப்பேன் என்ற தீர்க்கமும் கிடையாது.

மசாலா நாயகர்களுக்கு நடுவே ஒரு மாற்றுப் பாதையில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம்தான் அவருடைய பல முயற்சிகளுக்கு தூண்டுகோல்.

அந்த முயற்சிகளினால் சில சமயங்களில் மகாநதி, அன்பே சிவம் போன்ற தரமான படங்கள் கிடைக்கும். சில சமயம் ஆளவந்தான், விருமாண்டி, மும்பை எக்ஸ்பிரஸ் போன்ற அரை வேக்காட்டு படங்களுடன் திருப்திபட்டுக் கொண்டு விடுவார்.

உஙகளின் ரயில் நண்பன் வெஙகட் உஙகள் பதிவு மிக அருமை என்னை போல சில பேர் நினைததை நிங்கள் தைரியமாக ஏலுதியதற்கு நன்றி

What are you trying to say, I will put my comment in tamil soon otherwise you will tell something...