பகிர்தல்

உங்களுடன் பகிர சில பல உருப்படியான/ அல்லாத விஷயங்கள்

அட்சய திருதியை காரணமாக தங்க நகை வியாபாரம் களைகட்டி விட்டது. பத்திரிகை, தொலைக்காட்சி விளம்பரங்களைப் பார்த்தால், வடிவேலு பாணியில் "ஸ்......அப்பா! இப்பவே கண்ண கட்டுதே" என்று சொல்லத் தோன்றுகிறது. நகைக்கடைகளோடு வங்கிகளும் தங்க வியாபாரத்தில் ஜரூராக இறங்கி விட்டார்கள். "காற்றுள்ள போதே தூற்றிக் கொள்" என்பதை யார் புரிந்து வைத்திருக்கிறார்களோ, இல்லையோ வணிகர்கள் நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்கள். மூக்குப்பொடி விற்பவர்கள் கூட, அட்சய திருதியை முன்னிட்டு தங்க நாணயம் இலவசம் என்று வியாபாரப்படுத்துகிறார்கள். மக்களின் சென்டிமென்ட் மீதுள்ள பிரேமையையும் படித்தவர்களிடம் கூட உள்ள அறியாமையையும் மிகச்சரியாக உபயோகப்படுத்திக் கொள்ளும் அவர்களின் மார்க்கெட்டிங் திறமை பிரமிக்க வைக்கிறது.

இந் நன்னாளில் இது தொடர்பான என்னுடைய பழைய பதிவொன்றை தூசுதட்டி இங்கே மீள்பதிவு செய்கிறேன். தி.நகர் பக்கம் போவதற்கு முன், சற்றே இதைப் படித்துப் பார்த்துவிட்டு செல்லுமாறு வேண்டுகிறேன். :-)

()


மீள்பதிவு


கடந்த ஒரு வாரமாக சென்னை அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறது. பத்திரிகையிலும் தொலைக்காட்சியிலும் விளம்பரங்களுமாக 'இயேசு வருகிறார்' செய்திக்கு அப்புறமாக பரபரப்பான செய்தியாக இதுதானிருக்கும் என்கிற வகையில் ஒரே கலாட்டாவாக இருக்கிறது. பெரும்பாலான பெண்கள் செவ்வாய் கிரகத்திற்கு குடிபோகப் போவதான பரபரப்பில் இருக்கிறார்கள். பக்கத்து வீட்டு வம்புகளும், தொலைக்காட்சி தொடர்களைப் பற்றியும் பேசுவதற்கு முன்னால் அவர்கள் விவாதிக்கக் கூடிய விஷயம் இதுவாகத்தானிருக்கிறது. ஆக்கப்பூர்வமாக ஏதாவது பேசியிருக்கப் போகிறார்கள் என்று கனவு காணாதீர்கள். இல்லை.

அக்ஷய திருதியையான இன்று ஒரு கிராம் தங்கம் வாங்கினால் கூட வருகிற நாட்களில் அவர்கள் கேட்காமலேயே, கனக தாரா ஸ்தோஸ்திரம் சொல்லாமலேயே அவர்கள் வீட்டு கூரையைப் பிய்த்துக் கொண்டு தங்கம் கொட்டுமாம். பீரோவைத் திறந்து பார்த்தால் அவர்களுக்குத் தெரியாமலேயே கிலோ கணக்கில் தங்கம் இருக்குமாம்.

சீட்டு நிறுவனங்கள் 38 சதவீத வட்டி கொடுப்பதாக கூறி நிதி வசூலித்த போது இருந்த அதே பரபரப்பு இப்போதும் நிலவுகிறது. பெண்கள் பூரிப்புடன் தங்கநகைக் கடைகளில் வரிசையில் நிற்க, ஆண்கள் அம்போவென்று விளக்கெண்ணைய் குடித்த முகபாவத்துடன் வாசலில் காத்திருக்கிறார்கள். ஏறக்குறைய ஒரு ரூபாய்க்கு லாட்டரி வாங்கி ஒரு கோடி சம்பாதிக்க நினைக்கும் பேராசைக்கு கொஞ்சமும் குறைவில்லாத தன்மை அவர்கள் கண்களில் பார்க்க முடிகிறது.

இந்த நாளின் ஐதீகம் என்னவென்று எனக்குத் தெரியாது. தெரிந்து கொள்ளவும் விருப்பமில்லை. ஆனால் இந்த மாதிரியான பேராசைத்தனமான அசிங்கத்தை உள்ளுக்குள் வைத்துக் கொண்டு, ஐதீகம் என்று பம்மாத்து செய்யும் அசட்டுத்தனம் என்னை அருவருப்புடன் குமட்ட வைக்கிறது. இந்த மாதிரி பேராசையுடன் நகை வாங்கப் போகிறவர்கள், கல்வியறிவில்லாத, அடுத்து வேளை சோற்றுக்கு உத்தரவாதமில்லாத அடித்தட்டு மக்கள் இல்லை. நன்கு படித்த, வாழ்க்கையின் அடிப்படை வசதிகள் அத்தனையும் கொண்ட உயர் / நடு மத்திய தர வர்ககத்தினரே. மாருதியில் பயணிக்கிறவன் டொயாட்டாவிலும், தாம்பரத்தில் வீடு வைத்திருக்கிறவன், அண்ணாநகரில் பங்களா வாங்கும் பேராசையிலும் இருக்கிறான் என்பதே இந்தச் செய்தியில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய மறைமுக உண்மைகள். மனிதன் தன் வசதிகளை பெருக்கிக் கொண்டு போகட்டும் தப்பில்லை. ஆனால் அது உழைப்பின் மீது சாத்தியமாகப்பட வேண்டுமே தவிர குருட்டு அதிர்ஷ்டங்களால் வரும் என்று எதிர்பார்ப்பது அபத்தமானது. அசட்டுத்தனமானது.

இவர்கள் தாங்கள் கற்ற கல்வியை எதற்கு பயன்படுத்துகிறார்கள் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எந்தத்துறையில் படித்தால் வளமான எதிர்காலம் இருக்குமென்று தேடி லஞ்சம் கொடுத்தாவது முட்டி மோதி சீட் வாங்கி படித்து, நல்ல வருமானம் வரும் நிறுவனத்தில் பணிபுரிந்து, மார்க்கெட்டில் தனக்கேற்ற விலையை தரும் பெண்ணை திருமணம் செய்து கொண்டு, இரண்டு படுக்கையறை கொண்ட வீடு வாங்கி, தன் எதிர்காலத்திற்காகவும் வாரிசுகளுக்குமான சொத்தை சேர்த்து வைத்து விட்டு ஒரு நாள் ஹார்ட் அட்டாக் வந்து செத்துவிடுவதைத் தவிர, தான் கற்ற கல்வியை சுயசிந்தனைகளுக்காக பயன்படுத்துகிறார்களா என்று சந்தேகமாக இருக்கிறது. தன் முன்னோர்கள் சொன்ன காரியங்கள் என்றாலும் அதை நாமாகவும் ஆராய்வோம் என்கிற அடிப்படை யோசனை கூட இவர்களுக்கு தோன்றாமல் ஆட்டு மந்தைக் கூட்டங்களாக இருப்பது எரிச்சலாக இருக்கிறது. 'தேடிச் சோறு நிதந் தின்று' என்கிற பாரதியின் பாட்டுக்கு நாமே உதாரணங்களாய்த் திகழும் வேடிக்கை மனிதர்களாயிருக்கிறோமா?

உலகத்திலேயே மிகக் கொடுமையான விஷயம் அறியாமைதான். போதுமான கல்வியறிவு பெற்றிருந்தும் அதே அறியாமையில் நாம் இருப்பது இன்னும் கொடுமையான விஷயம். என்ன செய்தாவது நாம் பணக்காரர்களாகி விட வேண்டும் என்கிற ஆசைதான் இவர்கள் கண்களை மறைக்கிறதா? அட்சய திருதியையில் தங்கம் வாங்கினால் தொடர்ந்து தங்கம் சேரும் என்பது உண்மையானால், போன வருடம் இதே நாளில் தங்கம் வாங்கியதற்கு இந்த வருடம் அதிக தங்கம் இவர்களிடம் 'தானாக வந்து' சேர்ந்திருக்கிறதா? அதற்கும் முன்வருடம் தங்கம் வாங்கியவன் இந்நேரம் தங்கச் சுரங்கத்திற்கல்லவா உரிமையாளனாக இருந்திருக்க வேண்டும். இல்லையே? இந்த அடிப்படை யோசனை கூட இல்லாமல் இந்த வருடமும் தங்கம் வாங்க வரிசையில் நிற்பவர்களை என்னவென்பது? பரபரப்பான சினிமாவின் அனுமதிச்சீட்டு ஒன்றிற்கு முன்பதிவு செய்வது போல், இந்த வருடமும் குறிப்பிட்ட இந்நாளில் தங்கம் வாங்க முன்பதிவு செய்யப்படுகிறதாம்.

இந்த விஷயத்தில் வணிகர்களைச் சொல்லி பயனில்லை. வணிக தர்மப்படி அவர்களின் முக்கிய நோக்கம் பொருட்களை எப்படியாவது விற்பதும் அதன் மூலம் லாபம் பெறுவதும். இதற்காக அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யவோ வாக்குறுதி கொடுக்கவோ தயாராக இருப்பார்கள்.
வாடிக்கையாளர்களாகிய நாம் அலலவா சிந்திக்க வேண்டும்? தந்தையர் தினம், அன்னையனர் தினம் என்று இறக்குமதி செய்யப்பட்ட சென்டிமென்ட்டுகளை அவர்கள் தங்கள் விளம்பரங்களின் மூலம் ஊதிப் பெருக்கி வாடிக்கையாளர்களை எப்படியாவது வாங்கச் செய்கிறார்கள். இந்த அட்சய திருதியையும் அதே போன்றதுதான்.

()

பெண்ணுரிமை, பெண்ணியம் பேசும் சில பெண்களும் உடம்பு நிறைய நகைகளை பூட்டிக் கொண்டு முழங்கும் போது சிரிக்கவே தோன்றுகிறது. தன்னை, தன் சிந்தனைகளை வைத்து பிறர் மதிக்க வேண்டும் என்கிற தன்னம்பிக்கை இல்லாமல் தான் போட்டிருக்கிற நகைகளை வைத்து தன்னை பிறர் மதிக்க வேண்டும் என்று அடிமைச் சிந்தனைகளுடன் இருக்கிற இவர்கள் பெண்ணுரிமை என்பது எது என்பதை தெளிவாக புரிந்து கொண்டிருக்கிறார்களா? சில ஆண்களும் இவர்களுக்கு போட்டியாக நகைகள் அணிந்திருப்பதை காண எரிச்சலாகவும், அருவருப்பாகவும் இருக்கிறது. இடது கை விரல்களிலும் மோதிரங்கள் அணிந்திருப்பவர்களை காணும் போது, இடது கையால் மட்டும் செய்ய வேண்டிய ஒரு வேளையில் என்ன செய்வார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது.

கேவலம் ஒரு உலோகம் நம்மை இவ்வாறு ஆட்டி வைப்பது குறித்து நாம் சிந்தித்திருக்கிறோமா? இரும்பைப் போல, அலுமினியத்தைப் போல இவை நம் அன்றாட வாழ்வில் உபயோகிக்கக்கூடியதாக இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. நாம் முதலீடு செய்திருக்கிற அத்தனை தங்கத்தையும் பொதுவில் முதலீடு செய்தால் உலக வங்கிக்கே கடன் கொடுக்கும் நிலையில் இந்தியா மாறிவிடும் என்று தோன்றுகிறது. அத்தனை முதலீடு ஒரு உலோகத்தின் மீது உள்ள பிரேமை காரணமாக முடங்கிக் கிடக்கிறது. (வருங்கால பாதுகாப்பிற்காக சொற்ப அளவில் தங்கம் சேர்த்து வைத்திருக்கும் எளியவர்களை நான் இதில் சேர்க்கவில்லை)

'எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா' என்கிற பாரதியின் வாக்கை, 'எத்தனை கோடி ஆசைகள் வைத்தாய் இறைவா' என்று மாற்ற வேண்டிய சூழலில் இருக்கிறோம் போலிருக்கிறது.

அதிர்ச்சி மதிப்பீட்டிற்காகவோ, பரபரப்பை ஏற்படுத்தவோ அல்லது ரஜினி ரசிகர்களை சங்கடத்திலோ, கோபத்திலோ ஆழ்த்துவதற்காகவோ இந்த பதிவு எழுதப்படவில்லை. அது என் நோக்கமும் கிடையாது. ஆபாச வசைச் சொற்களைக் கூட எதிர்கொள்ள நேரிடும் என்று எதிர்பார்த்திருந்தும் இந்தப்பதிவு எழுதப்படுவதின் நியாயத்தை, திறந்த மனதுடன் வாசிக்கும் எவரும் பதிவின் இறுதியில் உணர்வார்கள் என்று நிச்சயமாகவே நம்புகிறேன்.

()

தமிழில் திரைப்படங்கள் தோன்றும் போது அது அப்படியே நாடகத்தின் கூறுகளை, தாக்கங்களை முழுவதுமாக உள்வாங்கி பிரதிபலித்தது. காட்சியமைப்புகள், ஆடை அணிகலன்கள், அரங்க அமைப்புகள், இசைப் பாடல்கள் என்று நாடகத்திற்கும் திரைப்படத்திற்கும் குறிப்பிடத்தக்க வித்தியாசம் ஏதுமில்லை. சுருங்கக்கூறின் நாடகங்களின் சுருள்வடிவமே திரைப்படம் என்பதாக இருந்தது. காளிதாஸ் (1931) ஹரிச்சந்திரா (1932) சீதா கல்யாணம் (1933) தொடங்கி புராணங்களின் உபகதைகளை கொண்டு தமிழ்ச் சினிமா பயணித்தது. பின்பு எம்.கே.தியாகராஜ பாகவதர், (ஹரிதாஸ் - 1944) பி.யூ.சின்னப்பா, கிட்டப்பா போன்ற இசையும் நடிப்புத்திறமையும் இணைந்த நாயக நடிகர்களின் துணை கொண்டு வளர்ந்தது. இடையே விடுதலைப் போராட்டத்தின் எதிரொலியாக காலனியாதிக்கத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் (நாம் இருவர் - 1947) எதிர்த்து திரைப்படங்கள் தோன்றின.

ஏ.பி.நாகராஜன் போன்றோர்களின் புராண மறுஉருவாக்க படங்களும் (திருவிளையாடல் - 1965) கண்களைப் பிழிய வைக்கும் பீம்சிங்கின் மிகை உணர்ச்சிப் படங்களும் (பாசமலர் 1964) வெளிவந்தன. புராணப்படங்கள் தேய்ந்து போய் சமூகக் கதைகள் (நல்லவன் வாழ்வான்; கெட்டவன் வீழ்வான் என்பதை அடிச்சரடாகக் கொண்டு) பெரும்பாலான படங்கள் வெளிவந்தன. இதிலிருந்து மாறுபட்டு ஸ்ரீதர் (தேன்நிலவு 1961) கே.பாலச்சந்தர் (சர்வர் சுந்தரம் 1964; நாணல் - 1965) போன்றவை வெளியாகின. தமிழ்த்திரையுலகின் முதல் கலகக்குரலாக (அன்றைய சூழ்நிலையில்) கே.பாலச்சந்தரை குறிப்பிடுவேன். அவள் ஒரு தொடர்கதை, அரங்கேற்றம், அபூர்வ ராகங்கள் போன்ற திரைப்படங்கள், மக்களை கனவுலகிலிருந்து மீட்டு யதார்தத்தின் வெளிச்சத்திற்கு அழைத்து வந்த ஆரம்பப் புள்ளிகளாக அமைந்து சர்ச்சைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தின.

()

1975-க்கும் 1980-க்கும் இடைப்பட்ட காலகட்டத்தை "தமிழ்த்திரையுலகின் பொற்காலம்" எனக்கூறலாம். பதினாறு வயதினிலே, சில நேரங்களில் சில மனிதர்கள் (1977), அவள் அப்படித்தான், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (1978) அழியாத கோலங்கள், உதிரிப்பூக்கள், நூல்வேலி, பசி, (1979), இவர்கள் வித்தியாசமானவர்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, நிழல்க்ள், மழலை பட்டாளம், மூடுபனி, (1980) என்று களம், பின்னணி, திரைக்கதையமைப்பு, இசை போன்ற பிரதான துறைகளில் வித்தியாசமான அமைப்பை கொண்டு வந்திருந்தன. எல்லா காலகட்டத்திலும் வணிக சினிமா, ரசனை சார்ந்த சினிமா என்பது தொடர்ந்து கொண்டிருந்தாலும், இந்தக் காலகட்டத்திலும் பெரும்பான்மையான ரசனை சார்ந்த சினிமா உருவாகின. இதன் மூலம் சர்வதேச திரைப்படங்களைப் பற்றின தேடலும், விவாதங்களும், விழிப்புணர்வும் சாத்தியமாக்கியது. நல்ல திரைப்படங்களை மக்கள் ஏற்கிறார்கள் என்பதால் வித்தியாசமான முயற்சிகளை கொடுக்கும் துணிவு இயக்குநர்களுக்கு ஏற்பட்டது.

திரைவிமர்சகர்கள் தமிழ்த்திரையுலகின் வரலாற்றை எழுதும் போது இந்த காலத்தை ஏக்கப்பெருமூச்சுடன் நினைவு கூர்கிறார்கள். இந்தப் படங்கள் பொதுமக்களின் பரவலான கவனத்தைப் பெற்றதோடு வணிக ரீதியான வெற்றியையும் பெற்றன. இதே நிலை தொடர்ந்திருந்தால், தமிழ்த்திரையுலகத்தின் முகமே மாறிப் போய் மேற்கு வங்காளம், கேரளம் போன்ற மாநிலங்கள் பெற்றிருந்த ரசனை வளர்ச்சியை நாமும் பெற்றிருக்கக்கூடும்.

ஆனால் 1982-ல் ஏவி.எம்.எம். நிறுவனத்திலிருந்து வெளிவந்த "சகலகலா வல்லவன்" என்கிற திரைப்படத்தின் மாபெரும் வெற்றி இந்த வளர்ச்சியை அடியோடு மாற்றியது. உலகப் போரின் போது ஜப்பானிய நகரங்களின் மீது போடப்பட்ட அணுகுண்டுகளின் பாதிப்போடு இதை ஒப்பிடலாம். குறிப்பிட்ட படத்தின் வணிகரீதியான மிகப் பெரிய வெற்றி மேற்சொன்ன சூழ்நிலையை குரூரமாக குலைத்துப் போட்டது. ஆபாசம், வன்முறை, நாயக புகழ்ச்சி, மிகை உணாச்சி, பாசாங்கு என்று எல்லாவிதமான செயற்கைத்தனங்களுடன்தான் பிற்காலத்திய படங்கள் வெளிவந்தன. இடையிடையில் மாற்று முயற்சிகள் வந்தாலும் அவை பெரும்பான்மையான கவனத்தை ஈர்க்கவில்லை. தமிழ் சினிமாவின் முக்கியமான மறுமலர்ச்சிப் படமான "நாயகனை" (1987) உருவாக்கிய மணிரத்னம், பிற்பாடு "தளபதி" (1991) போன்ற வணிகரீதியான சினிமாவை கொடுக்க நேர்ந்தது. தரமான திரைப்படங்களை பார்த்து உள்வாங்கி வெளிவந்த திரைப்படக் கல்லூரி மாணவர்களும் (ஊழை விழிகள் - இதே போன்ற படங்களையே அளிக்க முடிந்தது. விக்ரமன் போன்றோரது படங்கள் மோசமான முன்மாதிரிகளாகவே இருந்தன.

()

இப்போதைய காலகட்டத்திற்கு திரும்புவோம். தொடர்ந்து "ஸ்டீரியோ டைப்" படங்களை பார்த்து சலித்துப் போனதும், சர்வதேச சினிமா குறித்து அறிவுஜீவிகள் தவிர்த்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு எழுந்ததாலும், ஊடக வளர்ச்சி காரணமாக சினிமாவின் தொழில்நுட்பம் குறித்து பாமரனும் அறிய முடிந்ததாலும் மக்கள் மாற்று முயற்சிகளை மெலிதாக வரவேற்றனர். காதல் என்று ஆரம்பிக்கிற பெயரில் நிறைய கண்ராவிப் படங்கள் வந்திருந்தாலும், பாலாஜி சக்திவேலின் "காதல்" திரைப்படம் (2004) ஒரு பெரிய ஆசுவாசமாக அமைந்தது. நல்ல திரைப்படங்களை மக்கள் வரவேற்பார்கள் என்கிற நம்பிக்கை இளம் இயக்குநர்களுக்கு பிறந்தது. இதனின் சமீபத்திய தொடர்ச்சியாக அழகிய தீயே, வெயில், மொழி, பருத்தி வீரன் என்று குறைவான வணிக சமரசங்களோடு படங்கள் வெளிவந்து வணிக ரீதியாக வெற்றியையும் பெற முடிந்திருக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் முன் குறிப்பிட்ட பொற்கால சூழ்நிலையையும் தாண்டிச் செல்ல முடியும் என்கிற நம்பிக்கையை இந்தப் படங்கள் ஏற்படுத்தியிருக்கிறது. (வணிகரீதியான அம்சங்கள் குறைவாக இருந்தாலே, அது நல்ல படம் என்று நாம் பேச ஆரம்பித்திருப்பது துரதிர்ஷ்டவசமானதுதான் என்றாலும், நிஜமாகவே நல்ல படங்களை எடுப்பதற்கு இவைகளை ஆரம்ப முயற்சிகளாக கொண்டு வரவேற்கலாம்)

ஆனால் இந்த ஆக்கப்பூர்வமான சூழ்நிலையை சிவாஜி திரைப்பட வரவு குறித்த அதீத பரபரப்பு, முன்னர் குறிப்பிட்ட அதே மாதிரியான சீர்குலைவை ஏற்படுத்தி விடுமோ என்கிற அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சகலகலா வல்லவன் போன்றே சிவாஜியும் ஏவி.எம். நிறுவனத்திலிருந்து வெளிவருகிறது என்பதுதான் நகைமுரண். சினிமாப் பத்திரிகைகள் தொடங்கி ஜோதிடப் பத்திரிகைகள் வரை எதுவுமே "சிவாஜி"யைப் பற்றி எழுதாமலிருக்க முடியாது என்கிற அளவிற்கு இத்திரைப்படம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. (இதே போன்று முன்னர் பரபரப்பை ஏற்படுத்தின "பாபா"வின் கதியும் நினைவிற்கு வருகிறது). வேறெந்த படத்திற்கும் இல்லாத அளவிற்கு இந்த படத்தின் வணிக ரீதியான விற்பனையின் தொகை பரபரப்பைக் கூட்டியிருக்கிறது. ஆடியோ விற்பனையே 3 லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


எத்தனையோ வணிகரீதிப்படங்கள் தொடர்ந்து வந்துக் கொண்டிருக்கவில்லையா, சிவாஜி வருவதால்தான் ஆக்கப்பூர்வமான சூழ்நிலை மாறிவிடுமா? என்னய்யா அபத்தமாக இருக்கிறது? என்று உங்களில் சிலருக்கு தோன்றக்கூடும். ஏற்கெனவே குறிப்பிட்டது போல் நான் அஞ்சுவது இந்தப்படத்தின் பரபரப்பு குறித்தும், ஆர்ப்பாட்டம் குறித்தும்தான். ஒருவேளை இந்தப்படம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றால், மீண்டும் வணிகரீதியான படங்களுக்கு மவுசு கூடி, வணிகரீதி இயக்குநர்கள் பிசியாகி விடுவார்கள். மாற்று முயற்சிகளின் பிரகாசம் மங்கிப் போய், நாளடைவில் தேய்ந்து போய்விடவும் வாய்ப்புள்ளதாக நான் கருதுகிறேன். மீண்டும் இந்த சூழ்நிலை மலர எத்தனை வருடங்கள் காத்திருக்க வேண்டுமோ?


()

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். வருடத்திற்கு சுமார் 1000 படங்கள் தயாரிக்கும் ஒரு தேசத்திலிருந்து சர்வதேச தரத்திற்கு இணையான படங்களின் சதவீதம் மிக மிகக்குறைச்சலே. ஆஸ்கருக்காக ஏங்கிப் போய், அது கிடைக்காத விரக்தியில், அது உலகத்தரம் அல்ல, அமெரிக்கத்தரம் என்று பேசுவது "சீசீ இந்தப் பழம் புளிக்கும்" என்கிற கதையைத்தான் நினைக்க வைக்கிறது. ஆஸ்கர் விருது கிடைப்பது ஒரு புறம், அதன் நாமினேஷன் பட்டியிலில் இடம் பெறுவதற்கே நாம் மல்லாட வேண்டியிருக்கிறதே? cannes film festival-ல் திரையிடுவதற்கு கூட பெரும்பான்மையான திரைப்படங்கள் லாயக்கில்லாதவை. இந்த நிலை குறித்து நாம் கொஞ்சமாவது வெட்கப்பட வேண்டாமா? ஈரான் போன்ற கைக்குட்டை தேசங்கள் கூட சர்வதேச அளவில் குறிப்பிடத்தக்க கவனிப்பை பெறும் போது நம் நிலை என்ன?

"கல்தோன்றி மண்தோன்றா காலத்து முன்தோன்றிய மூத்தகுடி" என்று பழம்பெருமை பேசிக் கொண்டிருப்பதில் மாத்திரம் புண்ணியமில்லை. காலத்திற்கேற்ப நம் தரத்தையும் முன்னேற்றிக் கொள்ள வேண்டும். மக்களின் ரசனை மேம்பாடும், குறிப்பாக படைப்பாளிகளின் படைப்பும் மேம்பாடும் முக்கியமானவை. எனவேதான் சிவாஜி போன்ற அதிக பரப்பரப்பை ஏற்படுத்துகிற வணிக நோக்கமுடைய படங்களை தொடர்ந்து நாம் தோல்வியடைய வைப்பதன் மூலம், திரையுலகினரை சிந்திக்க வைத்து தரமான படங்கள் வெளிவர நாமும் நமது பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

சாருவின் பாசாங்கற்ற வெளிப்படையான எழுத்துக்களை விரும்பிப் படிப்பவன் நான். அவருடைய முதல் "நாவலான எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ·பேன்சி பனியனும்" படித்த போது நாவலின் மரபை அநாயசமாக தாண்டிச் சென்றதோடு மற்றவர்கள் "தப்பு தப்பு" என்று கன்னத்தில் போட்டுக் கொள்கிற விஷயங்களை அங்கதத்துடன் பதிவு செய்திருந்ததால் மிகவும் பிடித்திருந்தது.
அவர் தொடர்ந்து எழுதிவரும் கோணல் பக்கங்களின் சமீபத்திய பதிவை பார்த்த போது சற்றே விநோதமாக இருந்தது. அவர், உயிர்மையில் பாகவதைரைப் பற்றியும் சின்னப்பாவைப் பற்றியும் எழுதி வரும் போதே எனக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது, பிலிம் நியூஸ் ஆனந்தனுடன் போட்டி போட முயல்கிறாரா என்று. ஏனெனில் இந்த மாதிரி கட்டுரைகளை எழுத நிறைய பேர் இருக்கிறார்கள். பிரத்யேகமான அயல்மொழி எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தி (ப.சிங்காரம் என்கிற அற்புதமாக எழுத்தாளரை சாருவின் மூலமாகத்தான் கண்டு கொண்டேன்) அவர் எழுதியிருந்த கட்டுரைகளை தொடர்ந்து படித்திருந்தவன் என்கிற முறையில் இந்த சினிமாக் கட்டுரைகள் எனக்கு சாதாரணமாகவே பட்டது.

இப்போது சமீபத்திய கட்டுரைக்கு வருவோம். பாபாவின் படத்திலிருந்து விபூதி கொட்டுவதாகவும், பாபாவை காணச் சென்ற நண்பருக்கு தங்கச் சங்கிலி கிடைத்ததாகவும், இன்னும் பல பாபா... மகிமைகளை எழுதியிருந்தார். தங்கச் சங்கிலி வாங்க வேண்டுமென்றால் ஜி.ஆர்.டி.தங்கமாளிகைக்கு போனால் போதுமே, எதற்கு நள்ளிரவிலிருந்து கால் கடுக்க சிறுநீர் கூட கழிக்காமல் காத்திருக்க வேண்டுமென்று எனக்குப் புரியவில்லை. (ஜி.ஆர்.டியில் நகைக்கு காசு கேட்பார்களே, அதனால் இருக்குமோ?)
பொதுவாகவே தீவிரமாக நாத்திகம் பேசுபவர்கள், நாடி தளர்ந்த காலத்தில் ஆத்திகத்தின் பக்கம் சாய்ந்து விடுவதை காண முடிகிறது. சாருவும் அந்த திசையை நோக்கி போகிறாரோ என்னமோ? கடவுள் இருக்கிறாரா இல்லையா என்கிற கேள்விக்கு "இருக்கட்டும்" என்று யாரோ சொன்னார்கள். நானும் அந்தக் கட்சிதான்.

()

விஜய் டி.வியில் 25.02.07 (ஞாயிறு) காலை 11.00 மணிக்கு (இந்திய நேரப்படி) "நாளை" என்றொரு படம் திரையிடுகிறார்கள். இதுவரை பா¡க்கதாவர்கள், மனைவிக்கு சப்பாத்தி பிசைந்து கொடுத்து, துணிதுவைத்து, வீடு மெழுகி இன்னும் நேரம் மிச்சமிருக்கிற கனவான்கள் இந்தப் படத்தை முயற்சிக்கலாம். புதுமுக இயக்குநர் என்று அலட்சியமாக பார்த்த போது படத்தின் "டிரீட்மெண்ட்" என்னை கவர்ந்தது. இதில் நட்ராஜ் என்கிற ஆரம்ப கால ரஜினிகாந்த்தை நினைவுப்படுத்துகிற நடிகர், திறமையாக நடித்திருக்கிறார். பிறகு ஏன் காணாமற் போனார் என்று தெரியவில்லை.

நாளை, "நாளை" பாருங்கள்.

இந்தப் படத்தைப் பற்றிய பிரகாஷின் பழைய பதிவு.

()

மதூர் பண்டார்க்கரின் படங்கள் சில பார்த்திருக்கிறேன். சாந்தினிபார், page3, (கார்ப்பரேட் இன்னும் பார்க்கவில்லை) என்று எல்லாப் படங்களுமே ஜகஜ்ஜோதியான இந்தி சினிமாக்களிலிருந்து விலகி மாற்று முயற்சிகளில் இறங்கியிருப்பது போல் படும். இவரின் சமீபத்திய படமான Traffif Signal-ஐ இந்தி தெரியாததாலும் நேரம் கிடைக்காததாலும் பார்க்க முயற்சிக்கவில்லை. பார்த்தவர்கள் எப்படியிருக்கிறது என்று பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

காலச்சுமை - ராஜ்கெளதன்
தமிழனி பதிப்பகம், 332 பக்கங்கள், ரூ.120.

நவீன தமிழ் இலக்கியத்தில் சில முக்கியமான விமர்சன நூல்களை எழுதியிருக்கும் ராஜ்கெளதமனின் புனைவு இது. தன் சுய சரிதத்தையே புனைவாக மாற்றி பதிந்திருக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. என்றாலும் புனைவுக்குரிய சுவாரசியம் குன்றாமல் அமைத்திருப்பது நன்று.
சிலுவைராஜூக்கு பாண்டிச்சேரி கல்லூரியில் உதவி பேராசிரியராக பணி நியமன உத்தரவு வருவதிலிருந்து இந்த நாவல் துவங்குகிறது.

பாண்டிச்சேரியின் சூழல், சிலுவைராஜின் திருமணம், உறவுகளுடன் அவனுக்கான மோதல்கள், பறையர் சாதி என்பதால் எதிர்கொள்ள நேரும் சமூக முரண்கள், கல்லூரி மாணவ அனுபவங்கள், வாடகை வீட்டுப் பிரச்சினைகள், இடமாற்றங்கள், குடிப்பழக்கம், இலக்கியம் மற்றும் நண்பர்கள், முனைவர் பட்டத்திற்காக அ.மாதவையா படைப்புகளின் மீதான ஆய்வு, வாழ்க்கையை எதிர்கொள்ள நேருகின்ற ஆயாசங்களில் நினைவு கூர்கிற தத்துவங்கள் என்று கலந்து கட்டி இந்த புனைவு அமைகிறது. பெரும்பாலும் பேச்சுத்தமிழிலேயும் அவ்வப்போது உரைநடையிலேயும் அமைந்திருக்கிறபடியால் வாசகனோடு நெருக்கமாக உறவாடுகிறது இந்த நாவல்.

"சிலுவைராஜ் சரித்திரம்" என்று முன்னமே வெளியாகியிருக்கிற புதினம், கல்லூரி வாழ்க்கையின் முன்பிருந்த பகுதிகளை சொல்கிறது என்று யூகிக்கிறேன். இந்த நாவலை படித்தவுடன் முதல் பகுதியை படிக்கிற ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

()

ஆல்·பா - டி.டி. ராமகிருஷ்ணன் (தமிழில் குறிஞ்சி வேலன்)
கிழக்கு பதிப்பகம், 136 பக்கங்கள், ரூ.50.

சாருநிவேதிதாவின் எழுத்துக்களை மலையாளத்தில் மொழி பெயர்த்து வழங்கிக் கொண்டிருக்கும் ராமகிருஷ்ணனின் மலையாள நாவல் குறிஞ்சிவேலனால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது.
நாகரிகத்தின் உச்சியை அடைந்து விட்டதாக கூறிக் கொள்ளும் மனித இனம், மீண்டும் தன் வாழ்க்கையிலிருந்து பூஜ்யத்திலிருந்து, அதாவது கற்கால மனிதனாக, காட்டுவாசியாக ஆரம்பித்தால் எப்படியிருக்கும்? இப்படியான ஒரு கேள்வி மனிதவியல் ஆய்வாளரான உபலேந்து சட்டர்ஜிக்கு ஏற்பட, மிகுந்த திட்டமிடலுடன் ஒரு குழுவை ஏற்படுத்தி மனித வாடையே இல்லாத ஒரு தீவிற்கு செல்கிறார். தான் வந்த படகு உள்பட அனைத்துப் பொருட்களையும் அழித்து விட்டு நிர்வாணமாக காட்டுக்குள் நுழைகிறது அந்தக் குழு. உபலேந்துவின் திட்டப்படி, சரியாக 25 வருடங்கள் கழித்து ஒரு ஆராய்ச்சி மாணவர் அந்தக் காட்டை அணுகி, அவர்களிடம் எவ்வாறான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்று ஆராய்வதற்கான முன்னேற்பாட்டையும் செய்து வைத்திருக்கிறார்.

1973 ஜனவரி ஒன்றில் ஆரம்பிக்கும் அத்தியாயம் சடாரென 25 வருடங்கள் தாவி நகர்கிறது. அவிநாஷ் என்பவர் இந்த திட்டத்தின் காரணகர்த்தாவான பானர்ஜியின் உத்தரவுப்படி அந்தத் தீவு மனிதர்களிடம் ஏற்பட்டிருக்கிற பரிணாம வளர்ச்சி குறித்து அறிவதற்காக புறப்படுகிறார்.

இவ்வாறு மிகச் சுவாரசியமான - ஒரு ஆங்கிலப்படத்திற்கு நிகரான - கதையுடன் துவங்குகிற படைப்பு, நாவலமைப்பு காரணமாக வாசிப்பதற்கு சோர்வை ஏற்படுத்துகிறது. பேராசிரியர் உபலேந்து சட்டர்ஜி உட்பட 13 பேர்கள் (அதில் 5 பெண்கள்) என்னவானார்கள் என்பதை நாவல் முன்னும் பின்னுமாக பல தர்க்கங்களுடனும் விவாதங்களுடன் நகர்கிறது. நகரத்திற்கு திரும்பி வருகிற மூன்று பேர் தங்கள் அனுபவங்களை விளக்கி விட்டு, பூமியின் நாராசங்களை ஏற்றுக் கொள்ள முடியாமல் திரும்பிச் செல்கின்றனர். ஒரு சுவாரசியமான ஆரம்பத்தை ஏற்படுத்தியிருக்கிற ஆசிரியர், இன்னும் கற்பனையை விரிவுபடுத்தி அந்த 13 பேருடனேயே நாவல் பயணிப்பதாக அமைத்திருந்தால் வாசிப்பனுபவத்திற்கு ஏற்புடையதாகயிருக்கும் என நம்புகிறேன்.


புதிய பார்வை என்றொரு இடைநிலை இதழ் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? புத்தகக் கடைகளில் சினிக்கூத்து, நக்கீரன், ஜீனியர் விகடன் போன்ற குப்பைகளில் மார்பை செயற்கையாக நிமிர்த்திக் காட்டிக் கொண்டிருக்கும் நடிகைகளின் புகைப்படங்களின் மத்தியில் உற்றுப் பார்த்தீர்களேயானால் (வரிகளின் இடையில் படிக்காமலிருக்க வேண்டுகிறேன்) இந்த புத்தகம் உங்களுக்கு தெரியக்கூடும். பாவை சந்திரனை ஆசிரியராகக் கொண்டு வந்துக் கொண்டிருந்த பத்திரிகை நடுவில் நின்று போய் மீண்டும் வெளிவர ஆரம்பித்து இரு வருடங்களிருக்கும். இப்போதைய இணைஆசிரியர் மணா. (இவர் குமுதம் தீராநதியில் ஆசிரியராக இருந்தவர்) ஆசிரியரைப் பற்றி கேட்காதீர்கள்.
Photobucket - Video and Image Hosting

"இப்போது அதுக்கு என்ன?" என்பவர்களுக்கு: பிப்ரவரி 16-28 2007 இதழை தவற விடாதீர்கள். ஏனெனில் இது பல சுவாரசியமான அபூர்வமான கட்டுரைகளுடன் சினிமா சிறப்பிதழாக மலர்ந்திருக்கிறது. .
* பெரியார் படம் இயக்கிய ஞானராஜசேகரனின் நேர்காணல் சுவையாக இருக்கிறது.

* "தமிழ் சினிமாவில் அரசியல்" என்று ஒரு கட்டுரையில் நிழல் "ப.திருநாவுக்கரசு" அபூர்வமான தகவல்களை தந்திருக்கிறார்.

* "சப்தங்களின் வழியே நிகழும் வன்முறை" என்கிற கட்டுரை, இன்றைய தமிழ்ச் சினிமாக்களின் ஒலி என்கிற கூறு பார்வையாளனை எவ்வாறு உளவியல் ரீதியாக பாதிக்கிறது என்பதை ஆழமாக ஆய்கிறது. இதை எழுதியவர் செழியன் (ஆனந்த விகடனில் உலக சினிமா பற்றி தொடர் எழுதுகிறவர்)

* "இன்றைய மலையாள சினிமா ஒர் அவசரக் காட்சி" - இந்த கட்டுரையை எழுதியவர் என்னுடைய ஆதர்ச கட்டுரையாளர்களில் ஒருவரான சுகுமாரன்.

இன்னும் சில கட்டுரைகளும், கால பைரவனின் சிறுகதையும் தவிர, காவிரி நதி நீர் பங்கீட்டு பிரச்சினை குறித்து ஆதியோடு அந்தமாக ஆராயும் ஒரு கட்டுரையும் வாசிக்க உகந்தது.

நான் சுரேஷ் கண்ணன். ஏற்கெனவே "பிச்சைப் பாத்திரம்" என்றொரு வலைப்பதிவில் எழுதி வருவது உங்களில் யாருக்காவது தெரிந்திருக்கலாம். இன்னொரு பதிவை ஆரம்பிக்க வேண்டுமென்கிற நீண்ட நாள் எண்ணத்தை இப்போதுதான் நிறைவேற்றி இருக்கிறேன். ஆரம்பித்த பதிவிலேயே இன்னும் ஒழுங்காக எதையும் எழுதிக் கிழித்து விட வில்லையே என்கிற சிலரின் முணுமுணுப்பு பலமாகவே என்னுள் கேட்கிறது. ஏனெனில் இது எனக்குள்ளும் எழுந்த கேள்விதான்.

நூல்கள் பற்றிய சிறு அறிமுகம், திரைப்பட மற்றும் இலக்கிய விழாக்கள் பற்றிய அறிவிப்பு, சில சுவாரசியமான செய்திகள், தொலைக்காட்சி நிகழச்சிகள் என்று என்னை கடந்து செல்கிற அனைத்தையும் பற்றி எழுத வேண்டுமென்று நினைத்து இத்தனை சிறிய பத்திக்கு ஒரு பதிவு அவசியமா என்று நினைத்து பல பதிவுகளை எழுதமாலேயே விட்டிருக்கிறேன். எனவே அவ்வாறான சிறிய பதிவுகளுக்கென்று ஒரு வலைப்பதிவு அவசியம் என்று எப்பவோ தோன்றியது இப்போதுதான் சாத்திமாயிற்று. சிறுநீர் கழித்து முடித்து விடும் நேரத்தில் ஒரு வலைப்பதிவை சொந்தமாக்கிக் கொள்ள முடியும்தான் என்றாலும் இது நீண்ட அவகாசம்தான் என்று எனக்கே தெரிகிறது.

உங்களிடம் நான் பகிர்ந்து கொள்ள நினைப்பதையெல்லாம் இங்கே காண முடியும். அவற்றை வரவேற்பதும் நிராகரிப்பதும் இனி உங்கள் கையில்.